செய்யாறு அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு.. மது விற்பனை தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸ் விசாரணை...
செய்யாறு அருகே விபத்தில் உயிரிழந்த பெண் மது விற்பனை தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். பட்டு நெசவாளர். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39). இவர் அந்த பகுதியில் எந்தவித அனுமதியும் இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மது விற்பனை தொடர்பாக விஜயலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை விஜயலட்சுமி, தனது இருசக்கர வாகனத்தில் வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, விஜயலட்சுமியின் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் விஜயலட்சுமி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் முருகன், செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், தங்களுக்கும், செய்யாறு கிடங்கு தெருவை சேர்ந்த பிரபு, கொடநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாரி ஆகியோருக்கும் இடையே மது விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 25 ஆம் தேதி விஜயலட்சுமியிடம் பிரபு மற்றும் மாரி ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது பிரபு என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றார். அவர்கள்தான் எனது மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.