ஆரணியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
ஆரணியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஐ.ஜி.சந்தோஷ்குமார் தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சி, பேரூராட்சி தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் நடக்காமல் பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி வரவேற்றார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு என 4 நகராட்சிகள் உள்ளன. இத்துடன் பேரூராட்சி தேர்தல்களும் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதில் பதற்றம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கி அமைதியான முறையில் தேர்தல் நடக்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அருகில் நடந்த சம்பவங்களை முன் வைத்து தான் தற்போது பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே போலீசார் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கோட்டீஸ்வரன், குணசேகரன், செந்தில்குமார், விஸ்வேஸ்வரய்யா மற்றும் ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் நன்றி கூறினார்.