வயிரவன்பட்டி பைரவர் சுவாமி கோயிலில் பைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு
பைரவர் அவதரித்த நாளை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் சிறப்பு யாகசாலை அமைத்து ஹோமங்கள் நடத்தப்பட்டன
HIGHLIGHTS
வயிரவன்பட்டி அருள்மிகு ஶ்ரீ வைரவர் சுவாமி திருக்கோவில் பைரவாஷ்டமி முன்னிட்டு சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகே உள்ள வயிரவன்பட்டியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு வடிவுடை நாயகி அம்மன் சமேத ஸ்ரீ வளரொளிநாதர் ஸ்வாமி திருக்கோயிலில் மகா பைரவாஷ்டமி திருநாளை முன்னிட்டு சிறப்பு யாக ஹோமங்கள் நடைபெற்றன.
இத்திருக்கோவிலில் பைரவர் பிரதான சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். பைரவர் அவதரித்த தினமான இன்று சிறப்பு யாக ஹோமங்கள் நடந்தன. முன்னதாக பைரவர் மண்டபத்தில் புனித நீர் அடங்கிய நவ கலசங்களை பிரதிஷ்டை செய்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது. பல்வேறு யாக ஹோமங்களுடன், யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. கலசத்திற்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் சுவாமி அம்மன் மற்றும் பைரவர் சுவாமியை எழுந்தருளச் செய்து பல்வேறு நறுமண திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவர் சுவாமியை வழிபட்டனர்.