சிவகங்கையில் நள்ளிரவில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை
சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க சிவகங்கை நகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
HIGHLIGHTS
சிவகங்கையில் நள்ளிரவில் வீட்டிற்கு பெட்ரோல் குண்டு வீச்சு. சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை, பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிகள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தொண்டி ரோட்டில் வசிக்கும் பழனியப்பன் என்பவர் வீட்டில், இரு இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகர போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள ஏஞ்சல் சர்ச் தெருவில் அருகில் வசிப்பவர் பழனியப்பன். இவர் நேற்று ஊர் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நிர்மல், விக்கி, வெங்கடேஷ் உள்பட 5 இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியும் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் பழனியப்பன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற உள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஜன்னலில் பட்டு விழுந்ததால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு பழனியப்பன், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையின,ர் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இளைஞர்கள் சிறு குற்றங்களில் ஈடுபடும் போது நடவடிக்கை எடுத்தால் தான் அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடுவது தடுக்கப்படும். சிவகங்கையில் வெடிகுண்டு, கொலை சம்பவங்களில் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் வலுத்துள்ளது.