/* */

சேலம்: சிபிஐ (எம்) மாநிலக்குழு இரண்டாம் நாளின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும்.

HIGHLIGHTS

சேலம்: சிபிஐ (எம்) மாநிலக்குழு இரண்டாம் நாளின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

(பைல் படம்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சேலத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ. சவுந்தரராசன், பி. சம்பத், உ. வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். சிபிஐ (எம்) மாநிலக்குழு இரண்டாம் நாள் (15.3.2022) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் – 1: பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே அண்மை காலத்தில் முரண்பாடு முன்னுக்கு வருவதைத் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காண முடிகிறது. புதுச்சேரி கடந்த காலத்தில் இதனைக் கடுமையாக சந்தித்தது. குறிப்பாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம், மாநில அரசு உருவாக்குகிற சட்டம் அல்லது சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளில் இந்த முரண்பாடு பிரதிபலித்து வருகிறது.

அதிமுக ஆட்சியின் போது, கட்சிக்குள் எழுந்த பிரச்னைகளில் ஆளுநர் தலையிட்டு, ஒன்றிய ஆளும் கட்சியின் முகவர் போல செயல்பட்டது இப்போக்கின் உச்சகட்ட வெளிப்பாடு. பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்படும் போது அல்லது கவிழ்க்கப்படும் போது ஆளுநர்களை ஒன்றிய அரசு அப்பட்டமாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தற்போது தமிழ்நாடு ஆளுநர், தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு சூழலில் கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெற்றுள்ள நிலையில், மாநில நிலைபாட்டுக்கும், நலனுக்கும் எதிராக ஆளுநர் பேசியிருக்கிறார்.

அதே போல், மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்று அரசியல் சாசனம் குறிப்பிடுவதில் பிரதிபலிக்கும் பன்மைத்துவம் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைத் தளர்த்தும் விதமாக, மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை சிதைக்கும் விதமாக, இது இயல்பான ஒன்றிணைப்பு (Organic union) என்றும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு முனையிலிருந்து மறு முனை வரை கலாச்சார ஆன்மீக மாண்புகளின் அடிப்படையில் நீடித்து வந்துள்ளது என்றும் பேசியுள்ளார். இத்தகைய பேச்சு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்த குரல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்பைத் தாண்டியதாகவே கருத முடியும். இது கண்டிக்கத்தக்கது.

வேந்தராக இருந்து துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநில சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்படுவதே. மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டத் திருத்தத்தின் மூலம் அந்த அதிகாரம் ஆளுநரிடமிருந்து அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனைப் பரிசீலித்து, சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஆளுநர் அதிகாரத்தை அகற்ற வேண்டும் என தமிழக அரசை மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

ஆளுநர் பதவி தேவையற்றது என்பது துவக்கத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. தற்போதைய சூழலில் இந்த விவாதம், மத்திய, மாநில உறவுகள் சீரமைப்பு என்ற சட்டகத்தின் பின்புலத்தில் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவரை ஆளுநர் நியமனம் அரசியல் நியமனமாக இருக்கக் கூடாது என்பதோடு, நியமனம், மாற்றம் அனைத்தும் மாநில அரசாங்கங்களின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும் என்பதை இம்மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 2: அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் அவுட்சோர்சிங்– முறையை கைவிட வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தமிழகத்தில் பாரம்பரியமான தொழிழ்நுட்ப கல்வி நிறுவனம் ஆகும். இதன் வளர்ச்சி உலகப் புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் கூட்டான பயிற்சி வகுப்புகளை நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை என்ற பெயரில் பலகலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப ஊழியர்களை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

10 முதல் 17 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சுமார் 500 ஊழியர்கள் பல்கலைக் கழகத்தின் மேற்படி முடிவு காரணமாக வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்களில் பெரும்பான்மையோர் பி.இ., போன்ற பட்டம் பெற்றவர்கள். இனி வெளியில் வேறு வேலைகளை தேடும் வாய்ப்பு இல்லை. எனவே பல்கலைக் கழகம் மேற்படி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட, தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 15 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...