பரமத்தி அருகே பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ஜேடர்பாளையம் அருகே, பகல் நேரத்தில், விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களை, போலீசார் தேடுகின்றனர்.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவி, நரிமேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (65). விவசாயி. இவருடைய மனைவி பூங்கொடி (63). சம்பவத்தன்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு, அய்யம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். மதியம் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மர்மநபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காளியப்பன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று தடையங்களை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விவசாயி வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.