எஸ்எஸ்ஏ ஆசிரியர் பயிற்றுனர் பொதுமாறுதல் கலந்தாய்வு: 87 பேர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில், எஸ்எஸ்ஏ பிரிவில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
HIGHLIGHTS
பள்ளிக்கல்வித்துறை எஸ்எஸ்ஏ பிரிவில் 2021–22ம் கல்வி ஆண்டுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்கள், வட்டார மற்றும் குறு வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு மாநிலம் முழுவதும் இன்று துவங்கியது. தமிழகம் முழுவதும் 3,700 ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியிடங்களுக்கு, இந்த இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்ட அலுவலகத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள், பணி மூப்பு அடிப்படையில் அழைக்கப்பட்டனர். அதில், நாமக்கல் மாவட்டத்துக்கு 91 இடங்கள் காண்பிக்கப்பட்டன. 87 ஆசிரியர் பயிற்றுனர்கள் இந்த இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். பணி இடமாறுதல் பெற்றவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பணியிட மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.