வகுப்பறையின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்: கட்டிடம் கட்டித்தரலாமே
மோகனூர் அருகே அரசு பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் உள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து மோகனூர் அருகே உள்ள, எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மருதவீரன் தலைமையில், திரளான பெற்றோர்கள் நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
எஸ்.வாழவந்தியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 177 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிக்கு, போதிய வகுப்பறைகள் இல்லை. அருகில் உள்ள கலையரங்கிலும், மரத்தடியிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளது. 2019ம் ஆண்டு, கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அதையடுத்து, இடம் வாங்கிக் கொடுத்தால், கட்டிடம் கட்டித்தருவதாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர். பள்ளிக்கு அருகில் 30 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தை அளவீடு செய்து, பள்ளிக்கல்வித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கலெக்டருக்கு கடிதம் வைத்து, அவர் எங்களுக்கு பரிந்துரை செய்தால் மட்டுமே நாங்கள் அளவீடு செய்யமுடியும் என தாசில்தார் தெரிவித்துவிட்டார்.
இது தொடர்பாக அக். 2ல் நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்தில், புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாக அதுவும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் பள்ளியை நேரில் பார்வையிட்டு, விரைவில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.