விஜயபாஸ்கருடன் நெருக்கமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் ரெய்டு
நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள கோலாரம் கிராமம், வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவர் பல ஆண்டுகளாக தனக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் மூலம், நாமக்கல், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள், மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள், குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள் போன்ற அரசுப்பணிகளை கான்ட்ராக்ட் பெற்று கட்டுமானப் பணிகளை செய்து வருகிறார்.
இன்று காலை திடீரென்று நாமக்கல், நல்லிபாளையம் அருகில் உள்ள அவரது கட்டுமான அலுவலகம், கோலாரத்தில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களுடன், தென்னரசு நெருக்கமாக இருந்ததால் இப்போது அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.