நாமக்கல்: ஊரடங்கை மீறிய 3 கடைகளுக்கு சீல்
நாமக்கல் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். டூ வீலர்களில் வெளியே சுற்றிய 280 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு சில தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளன. கடைகளை பொறுத்த வரையில் மெடிக்கல் ஸ்டோர், பால், மளிகை, காய்கறி, இறைச்சி போன்ற கடைகள் மட்டும் மதியம் 1 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் நகரில் அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டு இருப்பதாக சப்கலெக்டர் கோட்டைக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாமக்கல் சேலம் ரோட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட செல்போன் கடை மற்றும் பேக்கரி கடைகளை அதிகாரிகள் கண்டறிந்து, பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் நாமக்கல் பஸ் நிலையம் அருகே திறந்திருந்த செல்போன் கடை ஒன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே, நாமக்கல் நகரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி, தேவையின்றி ஏராளமான நபர்கள் டூ வீலர்களில் சுற்றித்திரிவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் சேலம் ரோடு மற்றும் பரமத்தி ரோடு பகுதிகளில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை (ஆர்டிபிசிஆர்) செய்யப்பட்டது. அவ்வகையில், ஒரேநாளில் நாமக்கல் நகராட்சி பகுதியில் 280 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.