தாட்கோ மூலம் ட்ரோன் கருவி இயக்குதல் பயிற்சி.. நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்…
TAHDCO Drone Training-நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் வேளாண்மை துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி இயக்குதல் குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
TAHDCO Drone Training-தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. இதையொட்டி, தற்போது மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (சென்டர் ஃபர் ஏரோ ஸ்பேஸ் ரிசர்ச்) மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. ட்ரோன் கருவி மூலம் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக் கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில், அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும். இதன் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கலாம்.
மேலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்தப் பயிற்சியினை பெற 18 வயது முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், கல்வித்தகுதியில் பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட், லைசென்ஸ் மற்றும் டாக்டரின் உடல்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சி கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,100- தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, டிஜிசிஏ மூலம் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் லைசென்ஸ் வழங்கப்படும். மேலும் இந்த லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும்.
இந்தப் பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ, ட்ரோன் கருவிகளை வாங்கலாம் மற்றும் உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு மேலாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க உதவி செய்யப்படும்.
இந்தத் திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான http://tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2