பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் பிட் அடித்த அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்
பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் பிட் அடித்த அரசு பள்ளி மாணவர், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும், பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு ஆகிய அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சோர்ந்த 9,729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள் என மொத்தம், 19 ஆயிரத்து, 867 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
நேற்று, 9ம் தேதி திங்கள்கிழமை 82 மையங்களில், ஆங்கிலம் தேர்வு நடந்தது. அதில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்தநிலையில், திருச்செங்கோடு தாலுக்கா, மல்லசமுத்திரம் அரசுப்பள்ளி தேர்வு மையத்தில், பகல் 12.15 மணியளவில் ஆய்வுக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த பள்ளியைச் சேர்ந்த, மாணவர் ஒருவர், துண்டு சீட்டில் விடை எழுதிக் கொண்டு வந்து பிட் அடித்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். அது குறித்து மாவட்ட சிஇஓவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், அந்த மாணவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.