டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க கோரிக்கை
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், தமிழ்நாடு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் சங்க அமைப்பு மாநாடு, சிஐடியு மாநில செயலாளர் கோபிகுமார் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, யுனைட் பொதுச் செயலாளர் அழகுநம்பி, வெல்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில பொது செயலாளர் சுகுமாரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசு இ-சேவை மையங்கள், அரசு நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம், சமூக பாதுகாப்பு போன்ற அடிப்படை பயன்கள் வழங்கப்படுவதில்லை.
இந்த ஊழியர்களுக்கு தமிழக அரசு உடனடியாக குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ. 21,000 வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு பயன்கள். இஎஸ்ஐ போன்றவைகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இ.சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இ-சேவை மையங்களில் பரிவர்த்தனை இல்லை என்று கூறி மூடுவது ஏமாற்றும் விதமாக உள்ளது.
மேலும், இதை காரணம் காட்டி ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேவை மையங்கள், அரசு நிறுவனங்களில் டேட்டார என்ட்ரி ஆபரேட்டர்களாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தி கால முறை சம்பளம் வழங்கிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பலர்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், கோபிகுமார் தலைவராகவும், மனோஜ்குமார் பொதுச் செயலாளராகவும், சசிரேகா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திலகராஜ், பாலவிநாயகம், பூபதி, கணேஷ்குமார். கணேஷ். வினோலியா, லோகநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.