நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில், 5.30 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் மற்றும் 2வது தவணை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழக அரசின் சார்பில் அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு, 2ம் தவணை கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் விழா, நாமக்கல் முல்லை நகரில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெகராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாவட்டத்தில் உள்ள 5,30,417 அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவி 2ம் தவணை ரூ.2,000 ம் மற்றும் 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரபாகரன் , மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், நகர செயலாளர்கள் ஆனந்தன், பூபதி, சிவகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து காளப்பநாய்க்கன்பட்டி, ராசிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் 83.212 குடும்பங்களுக்கும், திருச்செங்கோடு தொகுதியில் 85,992 குடும்பங்களுக்கும், பரமத்திவேலூர் தொகுதியில் 84,957 குடும்பங்களுக்கும், நாமக்கல் தொகுதியில் 99,997 குடும்பங்களுக்கும், ராசிபுரம் தொகுதியில் 87,771 குடும்பங்களுக்கும், சேந்தமங்கலம் தொகுதியில் 88,448 குடும்பங்களுக்கு கொரோன நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி என, மொத்தம் ரூ.106.08 கோடி, இம்மாத இறுதிவரை சம்மந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.