நாமக்கல்லில் ரூ.1 கோடி மதிப்பு 340 கிலோ கஞ்சா கடத்தல்: 5 பேர் கைது
நாமக்கல்லில் ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூருக்கு, கஞ்சா கடத்தல் சம்மந்தமாக கிடைத்த தகவலின் பேரில், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டது. தனிப்படையினர் நாமக்கல் - திருச்செங்கோடு மெயின் ரோட்டில் எர்ணாபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருச்செங்கோடு பக்கமிருந்து வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 280 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தில் இருந்தவர்களை விசாரித்ததில், அவர்கள் குமரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (41), திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயவீரன் (30), நல்லூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த ராணி (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வரும்வழியில் 2 பேரிடம் கஞ்சாவை விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. அதன்பேரில் ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தி (39), ராஜீ (61) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் மூலமாக கஞ்சாவை வாங்கியது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.