குமாரபாளையம் மார்க்கெட் இடமாற்றம்: நகராட்சி கமிஷனர் வியாபாரிகளிடம் கருத்து கேட்பு
குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டில், மார்க்கெட் இடமாற்றம் குறித்து நகராட்சி கமிஷனர் வியாபாரிகளிடம் கருத்து கேட்டார்.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் செயல்படும் இடம் தேர்வு செய்யப்படுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சில நாட்கள் முன்பு சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் வாரச்சந்தை அல்லது காவேரி பாலம் அருகில் உள்ள காலி இடம் ஆகியன குறித்து கருத்து கூறினார்கள். அவர்களின் முடிவை பொறுத்து, அவர்கள் குறிப்பிடும் இடத்தில் தற்போதுள்ள கடைகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டு, குறிப்பிடும் இடத்தில் நிறுவப்படும் என்றும், புதிய கட்டுமான பணிகள் நிறைவு பெற ஒரு வருட காலம் ஆகும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து நகராட்சி கமிஷனர் விஜயகுமார் மார்க்கெட் வியாபரிகளிடம் இடமாற்றம் குறித்து கருத்து கேட்டார்.
இது குறித்து கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், தினசரி காய்கறி மார்க்கெட் வாரச்சந்தை வளாகத்தில் மாற்றுவதே தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என 70 சதவீத வியாபாரிகளும், மீதமுள்ள வியாபாரிகள் இடைப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் மாற்றலாம் எனவும் இரு தரப்பட்ட கருத்துக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து பரிசீலனை செய்து முடிவினை கூற உள்ளோம் என்றார்.
பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, குத்தகைதாரர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.