குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் இறைச்சி கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்…
City Municipal Corporation -குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் இறைச்சி கழிவுகள் அகற்றும் பணியை நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
City Municipal Corporation -நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டது. அந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் செல்கிறது. கத்தேரியில் துவங்கி, நகர எல்லை பகுதியான ராஜம் தியேட்டர் பின்புற பகுதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திபுரம், பெராந்தர் காடு, வழியாக வந்து பஸ் நிலையம், தம்மண்ணன் சாலை வழியாக சென்று மணிமேகலை வீதியில் கோம்பு பள்ளத்தில் உள்ள கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதியில் உள்ள மீன் கடைகள், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கோம்பு பள்ளத்தில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கோம்பு பள்ளம் பகுதி சுகாதராமற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
இதையெடுத்து, கோம்பு பள்ளம் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணணிடம் கவுன்சிலர் நந்தினிதேவி புகார் செய்தார். இதையடுத்து கோம்பு பள்ளம் பகுதியை தூய்மை செய்ய தூய்மை பணியாளர்களுக்கு விஜய் கண்ணன் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, கோம்பு பள்ளத்தில் தூய்மை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், கோம்பு பள்ளத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
33 வார்டுகளை கொண்ட குமாரபாளையம் நகராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்ட விஜய்கண்ணன் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் யாரும் எதிர்பாரத வகையில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நகரில் உள்ள 33 வார்டுகளையும் தனது வார்டாக கருத்தில் கொண்டே பணியாற்றுவதாக தலைவர் விஜய்கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆதரவு தந்தவர், ஆதரவு தராதவர் வார்டுகள் என பாரபட்சம் எதுவும் பார்க்க மாட்டேன் என பதவியேற்கும் போதே அவர் கவுன்சிலர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் செய்து கொடுத்து வருவதாகவும், சின்னப்ப நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, தூய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைளை வழங்கி உள்ளதாகவும் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், குமாரபாளையம் நகராட்சியில் பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்திற்கு புதிய ஆழ்குழாய் அமைத்தல், உழவர் சந்தையில் மூலிகை பொருள் விற்பனை மையம் தொடக்கம், அரசு பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குதல் ஆலோசனை முகாம், விபத்துக்கள் குறைய வேகத்தடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2