மதுரையில் சாலையில் சங்கமமாகும் கழிவுநீர்: கண்டு கொள்ளுமா மாநகராட்சி ?
மதுரை நகரில் பெரும்பாலான தெருக்களில், கழிவு நீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கியுள்ளன. கழிவு நீரும் சாலைகளில் பல இடங்களில், சங்கமம் ஆகிறது .
HIGHLIGHTS
மதுரை அண்ணா நகர், மேலமடை, கோமதிபுரம், ஜூபிலி டவுன் ஆகிய இடங்களில், பாதாள சாக்கடை பணிக்காக மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாமல் இருப்பதால், பெய்து வரும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளன.
மேலும், கால்வாயில் கழிவு நீரானது நேரானது பெருக்கெடுத்து, மழை நீருடன் சேர்ந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால், மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, காதர் மொய்தீன் தெரு, சௌபாக்கிய விநாயகர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு, ஆகிய இடங்களில் சாலையிலே பள்ளங்கள் ஏற்பட்டு, மழை நீர் குளம் போல தேங்கியுள்ளன.
அவ்வாறு தேங்கியுள்ள மழை நீரில், சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன், இந்த வழியில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் ,இவ்வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி சாலையில் மிக மோசமாக உள்ளது. இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி அலுவலர்கள் கவனத்தைக் கொண்டு சென்றும் கூட, இதுவரை சாலையிலே பெருக்கெடும் கழிவு நீரை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை .
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் பலர் மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், உதவி ஆணையாளர், சுகாதார அலுவலகம் ஆகியோர்கள் இப்பகுதியை பார்வையிட்டு, சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி கவுன்சிலர்கள், நேரடியாக வந்து தெருக்களை பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி கோரியுள்ளார்.