மதுரை அருகே பள்ளி பேருந்தில் மூச்சுத்திணறி மாணவிகள் மயக்கம்
மதுரை அருகே பள்ளி பேருந்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாணவிகள் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
மதுரை, திருப்பாலை நல்லமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி பேருந்தில் பயணம் செய்தபோது, நெரிசலில் சிக்கி மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பாலை பகுதியில் செயல்பட்டுவரும் நல்லமணி யாதவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை பள்ளி முடிந்து மாணவிகளின் வீடுகளுக்கு பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் மூலமாக மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, ஒரே வாகனத்தி்ல் அழைத்துசென்றபோது, கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பள்ளி வாகன ஓட்டுனர், அதே பகுதியில் உள்ள சந்து ஒன்றுக்குள் பள்ளி வாகனத்தை கொண்டுசென்று 30 நிமிடமாக நிறுத்தியுள்ளார். தொடர்ந்து நீண்டநேரமாக மாணவிகள் பேருந்தில் அடைத்து வைத்திருந்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதில் மாணவிகளான ஜனனி, ரம்யா, பாவனா, பிரஜிதா உள்ளிட்ட 10 மாணவிகள் மயக்கமடைந்தனர். இதனையடுத்து, கள்ளந்திரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா உள்ளிட்ட 4 மாணவிகளை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா விளக்கம் அளித்தபோது, பள்ளி மாணவிகள் மயக்கமடைந்த விவகாரம், ஒரே வாகனத்தில் அதிகளவிலான மாணவிகளை அழைத்துசென்றது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
மாணவிகள் நான்கு பேரும் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் தகவல் அளித்துள்ளார்.