கிருஷ்ணகிரியில் 451 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை - மேற்கு மண்டல ஐஜி தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 451 பேர் மீது சட்டரீதியாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஐஜி சுதாகர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரஅள்ளி ராஜாஜி லேஅவுட்-யை சேர்ந்த அபி(எ)அபிலாஸ்(29) என்பவர் தொழில் போட்டி காரணமாக கடந்த மாதம் 17ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய சபரி சிங் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் பின்புலத்தில் இருந்து எல்லா விதமான உதவிகளை செய்த காந்தன்(என) காந்தராஜ்(37) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்து அவரும் கைது செய்யபட்டார். மேலும், சபரிசிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2018ம் ஆண்டு குருபரப்பள்ளி சிக்காரிமேட்டை சேர்ந்த முத்து (எ) அழகுமுத்து என்பவரை முன்விரோதம் காரணம் கொலை செய்து சடலத்தை, பார்த்தகோட்டா தென்பெண்ணை ஆற்றில் வீசியது தெரிந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கி இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இக்கொலை வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, டிஎஸ்பி சங்கர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுக்கள். குற்றச்செயல்களில் பின்புலத்தில் இருந்து செயல்படுபவர்கள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓசூர் நகரில் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த காலங்களில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 451 கண்டறிந்து, 110 பிரிவின் கீழ் சட்ட ரீதியாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஐஜி சுதாகர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, கிருஷ்ணகிரி எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, டிஎஸ்பிக்கள் சரவணன், தங்கவேல், முரளி, கிருத்திகா, சங்கர் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.