வெண்ணமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை: பக்தர்கள் பரவசம்
கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 47 ம் ஆண்டு படி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
HIGHLIGHTS
வெண்ணமலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் 47 வது ஆண்டாக நடைபெற்ற படிபூஜையையொட்டி, ஏராளமான பக்தர்கள், பால், குடம் மற்றும் காவடி எடுத்து வெண்ணைமலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து, வெண்ணமலையில் சந்நிதானதுக்கு செல்லும் 18 படிகளில் வரிசையாக தேங்காய், பழம் பூஜை பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, ஜெகநாத ஓதுவார் சுவாமிகள் தலைமையில், திருப்புகழ், தேவாரம் பாடி ஒவ்வொரு படியாக தேங்காய் உடைத்து படி பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து படி பூஜையை வழிபட்டு சந்நிதிக்கு சென்று அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.
இதையடுத்து, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு மஹா தீபராதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சஷ்டி குழு தலைவர் காளிமுத்து, திருக்குறள் பேரவை தலைவர் மேலை பழனியப்பன் உள்பட பலர், படி பூஜை விழாவில் பங்கேற்றனர்.