சாட்சி அளிக்க வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்
கோபி அருகே நடந்த சாலை விபத்தில் சாட்சி அளிக்க ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கோர்ட்டு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.
HIGHLIGHTS
கோபி அருகே உள்ள கெட்டிசெவியூரில் விபத்தில் விவசாயி உயிரிழந்த வழக்கில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு கோபி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (66). விவசாயியான இவர் கடந்த 23.10.2019 அன்று கெட்டிசெவியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக திருப்பூர் மாவட்டம் வாவி பாளையத்தை சேர்ந்த ரவீந்திரன் என்கிற ரவிச்சந்திரன் (54) என்பவர் ஓட்டிச்சென்ற சரக்கு வேனும் சோமசுந்தரம் சென்ற மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அப்போதைய சிறுவலூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சோமசுந்தரம் விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்த வழக்கு கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 ல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், ஈரோடு தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாறுதலில் சென்று விட்டார். அவருக்கு வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை.
இந்த விபத்து வழக்கில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தொடர்ந்து ஆஜராகாத நிலையில், நேற்று வழக்கை விசாரித்த ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி, வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திற்கு, வரும் பிப்ரவரி 1ம் தேதி சாட்சி விசாரணைக்கு ஆஜராக வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.