ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையினர், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையினர், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி, தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, ஈரோடு மாவட்டம் சார்பில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி (Survey) கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இக்கணக்கெடுப்பு பணியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணிபுரியும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், பகல் நேரப் பராமரிப்பு மைய பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், பள்ளி செல்லா / மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்காக நடைபெறும் இக்கணக்கெடுப்பு பணியானது ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் வீடுவீடாக மேற்கண்ட களப்பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இத்துடன் இரயில்நிலையம், பேருந்துநிலையம், உணவகங்கள், பழக்கடைகள், பூக்கடைகள், கடைவீதி, காய்கறி அங்காடி போன்ற பொது இடங்களிலும் இக்களப்பணி நடைபெறவுள்ளது. மேலும் கட்டுமானப்பணி நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயப் பணிகள் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் பணிபுரியும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களது குழந்தைகளில் பள்ளி செல்லாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடத்திட மேற்கண்ட களப்பணியாளர்களுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து கூட்டாக ஆய்வு நடத்தப்படவுள்ளது.
எனவே, பள்ளி செல்லா / மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.