ஆசனூர் அருகே சோதனைச்சாவடியை முற்றுகையிட்ட யானைகள்
ஆசனூர் அருகே சோதனைச்சாவடியை யானைகள் முற்றுகையிட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி வழியாக திண்டுக்கல் - பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் உணவு-தண்ணீரை தேடி, வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ரோட்டில் வந்து நின்று கொள்கின்றன. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே கரும்பு லாரிகளை எதிர்நோக்கி யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள், லாரிகளை வழிமறித்து கரும்புகளை தின்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நேற்று வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் வெளியேறின. இந்த யானைகள் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தன. பின்னர் 3 யானைகளும் சோதனைச்சாவடியை முற்றுகையிட்டன. அதனைத்தொடர்ந்து சாலைகளில் அங்கும், இங்குமாக சுமார் 30 நிமிடம் உலா வந்தன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. தானாகவே வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன. இதன் காரணமாக கர்நாடக, தமிழகம் இடையே 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் அங்கிருந்து சென்றன.