கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதுப்பாளையம் தங்கமணி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு வெங்கடாசலம், ரகுநாதன் என்ற 2 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற ஒரு மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரகுநாதன் பழனியம்மாள் வீட்டின் அருகில் குடியிருந்து லேத் பட்டறை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பழனியம்மாள் 2 நாட்களுக்கு முன்பு, கோவையில் உள்ள வெங்கடாசலம் வீட்டிற்கு சென்று விட்டு , இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, கோபிச்செட்டிப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .