தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி
அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உண்டியல் மூலம் ரூ.10.67 இலட்சம் காணிக்கை பெறப்பட்டது
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் மலை மீது உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவிலுக்கு, பல்வேறு இடங்களிலிருந்து குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் தீர்த்த நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான ஈஸ்வரன், வடிவாம்பிகை கோவில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக இரண்டு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு, உண்டியல் எண்ணப்பட்டது. இந்த பணியில் அறநிலைய துறை அலுவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் என 20 ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரண்டு உண்டியலிலும் சேர்த்து ரூ.10,67,581 பணம் இருந்தது. ஆனால் வழக்கமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை எண்ணும் போது ரூ.12 இலட்சம் இருக்கும். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆறு மாதம் கழித்து உண்டியல் எண்ணப்பட்டதில், 50 சதவீதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.