தருமபுரி கலெக்டர் தலைமையில் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரமான குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீர் கலந்து விநியோகம் செய்யக்கூடாது.
பிரதிவாரம் ஒவ்வொரு நாளும் என்ன தண்ணீர் வழங்கப்படுகிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதி பெறாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அதனை முறைப்படுத்தி, உரிய வரியை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட வேண்டும். முன் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்புகள் இல்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பழுதடைந்த அல்லது தேவைப்படும் இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைக்க, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) மரு.வைத்தியநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சி) சீனிவாசசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, மாவட்ட திட்டக்குழு செயலாளர் மாரிமுத்துராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுகேந்திரன் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.