இருளர் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க சிபிஎம் கோரிக்கை
செஞ்சி அருகே ஏரிக்கரையில் உள்ள 27 இருளர் குடும்பங்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை எழுப்பி உள்ளது
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வி.நயம்பாடி ஊராட்சியில் ஏரிக்கரை பகுதியில் குடியிருக்கும் 27 பழங்குடி இருளர் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டு உள்ளார்.
செஞ்சி அருகே மழையால் பாதிக்கப்பட்ட 27 பழங்குடி இருளர் குடும்பங்களை சிபிஎம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுப்பரமணியன், புதன்கிழமை நேரில் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார், அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க கே.மாதவன், ஆல்பர்ட் ஆகியோர் உடனிருந்தனர்,
அதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட வி.நயம்படி கிராமத்தில் பல ஆண்டுகளாக ஏரி கரையோர பகுதிகளில் வசிக்கும் 27 பழங்குடி இருளர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக மழை காலங்களிலும், ஏரி நிரம்பும் போதும் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால், தங்களுக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த அரசு சார்பில் அதே பகுதியில் அரசு தரிசு நிலத்தில் இடம் ஒதுக்கினர். அங்குள்ள பக்கத்து நிலத்துகாரர், தன் நிலத்திற்கு வழி வேண்டி அந்த இடத்தை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார் செய்ததால், இலவச பட்டா வழங்க வேண்டிய திட்டம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது,
தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் , அவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியாக மாறிவிட்டதால்,அவர்கள் தற்போது அங்குள்ள சமூதாய கூடத்தில் தங்கி உள்ளனர், உடனடியாக மாவட்ட ஆட்சியர் இப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, கிடப்பில் போடப்பட்டு உள்ள அவர்களுக்கான ஒதுக்கீடு நிலத்தை அளந்து, 27 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.