மோட்டார் சைக்கிளில் ‘பறக்கும்’ மாணவர்கள் கட்டுப்படுத்துமா காவல்துறை?
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகமாக பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு போலீசார், உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர், திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு திருவண்ணாமலை, தண்டராம்பட்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பள்ளிக்கு செல்லும் நேரங்களில் போதுமான பஸ் வசதி இல்லை இதனால் பெரும்பாலான மாணவர்கள் சைக்கிள்களிலும் மற்றும் பைக்குகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் விலை உயர்ந்த பைக்கில் தினமும் பள்ளி க்கு வந்து செல்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வரும் மாணவர்கள் அதிவேகமாகவும் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று மாணவர்கள் செல்வதாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது இதனால் மாணவர்கள் படுகாயம் அடைந்து கடும் சிரமப்பட்டு வருகின்றனர் இதை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்க வேண்டும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை பெரும்பாலான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பின்பற்றுவதில்லை.
இந்த பைக்குகளில் செல்லும் மாணவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. சரிவர கையாள தெரியாததால், விபத்து ஏற்படுவதோடு, உயிரிழப்பும் ஏற்படுகிறது. இவற்றை அதிக விலை கொடுத்து, பிள்ளைகளுக்கு பெற்றோர் வாங்கிக்கொடுக்கின்றனர். மகனின் ஆயுளைப்பற்றி கவலைப்படாத பெற்றோர், ஆசையை நிறைவேற்ற எதைக்கேட்டாலும் வாங்கிக்கொடுத்து, பெருமைப்படுகின்றனர்...
இதனால் நாளுக்கு நாள் அதிகளவில் விபத்து ஏற்படுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக போலீசார் அவ்வப்போது மட்டும் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபடுவது இல்லை. இதனை பயன்படுத்திய மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்கின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சைலன்சர்களை மாற்றி அமைத்து சத்தத்தை அதிகரிக்கும் வகையில் ஓட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்படுவது மட்டுமல்லாமல் அதிருப்தி அடைகின்றனர்.
அதேபோல் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்திலும் அதைத் தொடர்ந்து மீனாட்சிப்பட்டு வரை கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக யார் செல்வது என்று போட்டி போட்டுக் கொண்டு முன்னாள் செல்லும் வாகனங்களை பற்றியோ பின்னால் வரும் வாகனங்களை பற்றியோ கவலைப்படாமல் அதிவேகமான பயணத்தை மேற்கொள்கிறார்கள் இந்த கே டி எம் பைக் இளைஞர்கள்.கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் கரைந்து விடுவது போல வேகமாக செல்லும் இந்த இளைஞர்களால் அந்தப் பகுதியில் வாகனம் ஓட்டி செல்லும் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகிறார்கள்.
அதேபோல் நல்லவன் பாளையம் பைபாஸ் சாலையில் இருந்து செங்கம் சாலை இணைக்கும் ஐயம்பாளையம் வரை இந்த பைக் ரேஸ் கார் அவர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் உள்ளது.
மலை சுற்றும் பாதையில் இருந்த இந்த பைக் ரேஸ் தற்பொழுது ஓய்ந்து உள்ளது ஆனால் மற்ற இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த கே டி எம் பைக் ரேஸ் காரர்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் அவர்களை எச்சரிக்க வேண்டும் மீறினால் தண்டனை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.