திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ் பெற்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு, 10.30 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 11.30 மணி அளவில் நிறைவடைந்தது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே தனித் தனியாக கிரிவலம் செல்ல தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.அவர்கள் வழக்கம்போல் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று கிரிவலம் வந்தனர். கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை. தனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.அதேபோல், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.