வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகரில் உள்ள திண்டிவனம் சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது, இதில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் விடிய விடிய திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையமான ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.
6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 1722 வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு , மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா ஆகியோர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இந்திரங்களை பார்வையிட்டு , சட்டமன்ற தொகுதி வாரியாக சீல் வைக்கும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்;
வாக்கு எண்ணிக்கை மையங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், தமிழ்நாடு அதிரடிப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு காவலர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,
அதே போன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் நான்கு திசைகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மற்றும் பாதுகாப்பு அறை உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இதனை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இன்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஜூன் 4 ஆம் தேதி வரை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வாக்கு எண்ணும் மையம் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார்
இதேபோன்று ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது,
இதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு தனித்தனி அறையில் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி, பொது பார்வையாளர் முன்னிலையில், தனித்தனி அறையில் சீல் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.