தரமற்ற உணவு: திருவண்ணாமலையில் விடுதி மாணவர்கள் சாலை மறியல்
தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக்கூறி, திருவண்ணாமலையில், விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை ராகவேந்திரா நகரில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. அதில் 45-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். விடுதியில் அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுவது வழக்கம். விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு உணவை முறையாக வழங்கவில்லை என்றும், உணவு தரமாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்கள் பலமுறை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. ஆவேசமடைந்த விடுதி மாணவர்கள் திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் நீடித்த சாலை மறியலால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.