திருவண்ணாமலை அருகே தொழிலாளியிடம் ரூ.73 ஆயிரம் நூதன மோசடி
திருவண்ணாமலை அருகே தொழிலாளியிடம் சலுகை விலையில் சைக்கிள் தருவதாக ரூ.73 ஆயிரம் நூதன மோசடி நடைபெற்றுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், குன்னத்தூர் அருகே அரியாபாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 24), தொழிலாளி. இவரது செல்போன் எண்ணிற்கு நேற்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதில் சலுகை விலையில் சைக்கிள் விற்கப்படுவதாகவும், உடனடியாக இதில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை உண்மை என நம்பிய ஆனந்தராஜ், அந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்துள்ளார்.
அப்போது அதில் ரூ.3 ஆயிரத்து 500 செலுத்தினால் சைக்கிள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் ஆன்லைன் மூலம் தனது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அவர் செலுத்தியுள்ளார். பின்னர் எவ்வித தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அதில் இருந்த சேவை மைய தொடர்பு எண்ணுக்கு அவர் போன் செய்தார்.
அப்போது அந்த எண்ணில் பேசிய நபர், நீங்கள் பதிவு செய்த சைக்கிள் இருப்பு இல்லை. எனவே நீங்கள் செய்த பதிவு ரத்தாகி விட்டது என தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆனந்தராஜ் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அதற்கு அந்த நபர் உங்கள் செல்போன் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும். அந்த எண்ணை சொல்லுங்கள், உடனடியாக பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுகிறோம் என தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் அவரது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவித்தார். செல்போனில் அவர் ஆனந்தராஜ் பேசி கொண்டிருந்த போதே அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்தது. உடனே அவர் அதனை பார்க்கும் போது அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி இருந்தது. இதனைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதன் மூலம் தான் சைக்கிளுக்கு அளித்த ரூ.3 ஆயிரத்து 500 உள்பட ரூ.73 ஆயிரத்து 500 ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.