மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சுற்றிலும் மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைச் சுற்றிலும் உள்ள மாட வீதியை முற்றிலுமாக சீரமைத்து கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தப்படும். மேலும், சாலையின் இருபுறமும் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி, புதைவட மின் பாதையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, கோவிலில் துவங்கி மாட வீதி முழுவதும் சீரமைக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியது. அதற்காக கடந்த மாதம் சாலை அளவீடு உள்ளிட்ட ஆய்வு பணிகள் நடந்தன.
அதன் தொடர்ச்சியாக, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட துவங்கினர். மாடவீதியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் கடந்த வாரமே தங்கள் கடைக்கு முன் உள்ள தகர கொட்டகைகள் மற்றும் கை வண்டிகளை அகற்றினர்.
கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.