பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
பட்டா வழங்க கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நீர்நிலை மற்றும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், பலவகை நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரியும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பிரகலநாதன், வாசுகி, ராமதாஸ், லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர்களை நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் போலீசார் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே உள்ளே சென்று மனு அளிக்க வலியுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மனு அளிக்க உள்ளே செல்வோம் என்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நீர்நிலை மற்றும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், பலவகை நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்றனர்.
நிர்வாகிகள் மூலம் மனுக்கள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு கலெக்டர் முருகேஷிடம் வழங்கினர். இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.