ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற 10-ஆம் தேதி கடைசி நாள்
அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு விருது வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவா ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கி வருகிறது. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
அதன்படி 2022-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2022-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "மாவட்ட விளையாட்டு அலுவலகம், கலெக்டர் வளாகம் பின்புறம், வேங்கிக்கால், திருவண்ணாமலை மாவட்டம் -606604" என்ற முகவரிக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.