அரசு கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
Govt Arts And Science College -திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
Govt Arts And Science College-தமிழகத்தில் தற்போது கலை அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் அரசு கலைக்கல்லூரிகளிலும் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அரசு கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவிக்கும் நிலை இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் பணி ஓய்வு பெற்று செல்லும் நிலையில் 2019க்கு பிறகு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு கல்லூரி நிர்வாகங்கள் இந்த பிரச்சனையை சமாளித்து வருகின்றது.
தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யும் அரசாணை கடந்த 2019-ல் வெளியானது. தங்கள் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக இந்த அரசாணை குறித்து ஒருதரப்பினர் சொல்ல, மற்றொரு தரப்பினர் இந்த ஆணை நிர்ணயித்துள்ள தகுதி அடிப்படைகள், தகுதி இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் 5000க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2019ஆம் ஆண்டு இவர்களின் பணி வரன்முறை செய்வதற்காக அறிவிக்கப்பட்ட அரசு ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்லூரி பேராசிரியர் தேர்ந்தெடுப்பதற்கான யுஜிசி தேர்வு பல ஆண்டுகளாக நடைபெறவில்லை தேர்வினை உடனடியாக நடத்த வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி காலை மாலை என இரு பிரிவுகளிலும் சேர்ந்து பணியாற்றும் 100 கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் சங்க மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் ராஜேந்திர குமார், விவேகானந்தன், நூர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- போராட்டத்தின் போது அரசாணை எண் 56 , பின்பற்றி கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்தில் எழுத்து தேர்வு முறையை கைவிட்டு, நேர்காணல் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
- சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல் கௌரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ 30,000 வழங்க வேண்டும்.
- அரசு கல்லூரிகளில் 20 ஆண்டுகளாக மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வறுமையில் உள்ள அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய ஊர்வு வழங்க வேண்டும் .
- மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் , அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2