பட்டா மாற்றம் செய்ய கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
பட்டா மாற்றம் செய்ய கோரி திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் அய்யுப்கான், பாபாஜான். இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து 60 சென்ட் விவசாய நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், நீண்ட நாட்களாகியும் நிலம் கையகப்படுத்தியதற்கான தொகையை வழங்கவில்லையாம். இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இவர்களது நிலம் சாலை அமைக்க கையகப்படுத்தவில்லை. இந்த இடத்திற்கான பட்டா ரத்து செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, விவசாயிகள் தங்களது இடத்தை மீண்டும் கிராம கணக்கில் உள்ளபடி தங்கள் பெயருக்கே பட்டா மாற்றம் செய்து தர கோரி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். மனு அளித்து 2 வருடங்களுக்கு மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்தாக கூறப்படுகிறது. இதனால், பாதித்த விவசாயிகள் பட்டா மாற்றம் செய்து தர கோரி தாலுகா அலுவலகம் முன்பு தங்களின் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும் காத்திப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் அரசு பணி காரணமாக சென்றுள்ளதால் இன்று மாலை சந்திப்பதாக கூறி உள்ளதாக காவல்துறையினர் கேட்டுக் கொண்டதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்