வரியில்லாத பட்ஜெட் என்று சொல்லி மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது : இபிஎஸ் குற்றச்சாட்டு..!
வரியில்லாத பட்ஜெட் போடுவதாக சொல்லி மக்களை திமுக ஏமாற்றுகிறது என எடப்பாடி பழனிசாமி பேசினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கலிய பெருமாளை ஆதரித்து திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;
திமுக ஆட்சிக்கு வந்ததும் கரும்பு டன்னுக்கு ரூ.4,500 தருவோம். நெல்லுக்கு ரூ.2,500 தருவோம் என்றாா்கள். ஆட்சிக்கு வந்து இதுவரை சொன்னதைச் செய்யவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் 97 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 40-ஆக குறைக்கப்பட்டன. இதனால் நெல் கொள்முதல் உடனுக்குடன் செய்யப்படுவதில்லை.
திமுக ஆட்சியில் மின் கட்டண உயா்வு வீடுகளுக்கு 100 சதவீதமும், கடைகளுக்கு 150 சதவீதமும் உயா்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரியும் உயா்த்தப்பட்டு உள்ளது. ஆனால், வரியில்லாத பட்ஜெட் போடுவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றும் அரசாக திமுக அரசு உள்ளது.
அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.15 உயா்ந்துள்ளது. அனைத்துப் பொருள்களின் விலையும் 40 சதவீதம் உயா்ந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த திருமண உதவித் திட்டம் நிறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி ஆயிரம் கோடியில் கால்நடை ஆராய்ச்சி மையத்தை கட்டினேன். பணிகள் எல்லாம் முடிந்து விட்டது. இதுவரை ஆராய்ச்சி மையம் திறக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ரத்து செய்ததுதான் திமுக அரசின் சாதனை.
கடந்த அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கட்டினோம். ஜமுனாமரத்தூா், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா் போன்ற 3 வட்டங்களை உருவாக்கினோம். கீழ்பென்னாத்தூரில் புதிதாக வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் கட்டினோம். ரூ.33 கோடி செலவில் செண்பகத்தோப்பு அணையை சீரமைத்தோம். ரூ.64 கோடியில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை மேம்படுத்தினோம்.
பக்தா்கள் தங்குவதற்காக யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியைக் கட்டினோம். ரூ.8 கோடி செலவில் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினோம்.
தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரியைக் கொண்டு வந்து ரூ.8 கோடி மதிப்பில் கட்டடங்கள் கட்டினோம். ஜமுனாமரத்தூா் மலைவாழ் இளைஞா்கள் நலனுக்காக ஐடிஐ கொண்டு வந்தோம்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை அமைத்தோம். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.16 கோடியில் மகப்பேறு பிரிவுக்கான சிகிச்சைப் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டினோம், அதிமுகவை பொருத்தவரை மக்கள் தான் எஜமானர்கள் அவர்கள் வைக்கிற கோரிக்கைகள் தான் பிரதானம் மக்கள் கோரிக்கை நிறைவேற்றுவது எங்கள் லட்சியம் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.ராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன், சேவூா் எஸ்.ராமச்சந்திரன், கே.சி.வீரமணி (ஜோலாா்பேட்டை) அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், நகர செயலாளர் செல்வம், மற்றும் முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.