திருவண்ணாமலை அருகே சுங்கச்சாவடியை அகற்றக்சோரி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருகே உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள சுங்க வரிச் சாவடியை அகற்ற வலியுறுத்தி, சுங்கச்சாவடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் திருவண்ணாமலை- வேலூர் சாலையில் தீபம் நகர் அருகில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி பொதுமக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வருகின்ற விவசாய பொருட்களுக்கும், விவசாய டிராக்டர்கள், லோடு லாரிகள் மற்றும் மினி லாரிகள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை கைவிட வேண்டும்.
சுங்க சாவடி அமைப்பதற்கான வழிமுறைகளில் நகர எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தள்ளி இருக்க வேண்டும். திருவண்ணாமலை நகர எல்லை அண்ணா நுழைவு வாயில் வரை நீடிக்கிறது. அண்ணா நுழைவு வாயிலுக்கும், தீபம் நகர் சுங்க சாவடிக்கும் இடையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே உள்ளது. எனவே தீபம் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டு உள்ளது. எனவே அதை முழுமையாக அகற்றிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் பேசும்போது, இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள சுங்க வரிச் சாவடியை அகற்ற வேண்டும். அகற்றவில்லை என்றால், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சுங்க வரிச் சாவடியை அகற்றும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிக்கும். என்றார்.
பின்னர் அவர்கள் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், டி.எஸ்.பி. குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அருகில் உள்ள கிராம மக்களிடம் இருந்து சுங்கச்சாவடியில் விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை கைவிடுவது குறித்து வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து முத்தரப்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என்று தாசில்தார் தெரிவித்தார்.இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.