அம்மணி அம்மாள் மடம் இடிப்பு; வம்சாவழியினர் கண்ணீர்
Ammani Ammal Tiruvannamalai-திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் மடத்தை இடித்தது நியாயமா என அவரது வம்ச வழியினர் மனக்குமுறலுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்
HIGHLIGHTS
Ammani Ammal Tiruvannamalai-திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் மடத்தை இடித்தது நியாயமா என அவரது வம்ச வழியினர் மனக்குமுறலுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்
திருவண்ணாமலை அடுத்த செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மணி அம்மாள் இவருடைய இயற்பெயர் அருள்மொழி என்பதாகும் . இவர் தீவிர சிவன் பக்தை ஆவார். இவருக்கு திருமணம் வயது வந்தவுடன் இவரது பெற்றோர் திருமணம் செய்ய முயற்சித்த போது குளத்தில் குதித்து விட்டார். கிராமத்தினர் குளத்துக்குள் மூழ்கி தேடியும் கிடைக்கவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு திடீரென குளத்தில் இருந்து தோன்றினார். அப்போது மண்ணை கைகளால் அள்ளினார், அது விபூதி பிரசாதமாக மாறியது பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கியவர் சிவபெருமான் தன்னை ஆட்கொண்டதாகவும் கூறினார்.
அன்று முதல் அருள்மொழி, அம்மணி அம்மாளாக மாறி சிவபெருமான் இட்ட கட்டளையை செய்து முடிக்க போகிறேன் எனக் கூறி திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரத்தை கட்டி முடிக்க வேண்டும் என்ற சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்றினார். இதனால் வடக்கு கோபுரம் அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்கப்பட்டது .பின்னர் அந்த வடக்கு கோபுரம் முன்புறம் ஒரு மண்டபம் அமைத்து அங்கேயே தங்கி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு உணவு வழங்கி உதவிகளையும் செய்து வந்தார் .இதனால் அவர் அம்மணி அம்மன் என்றே பக்தர்களால் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு கோபுரம் அருகில் உள்ள அம்மணி அம்மாள் மடத்தின் இடத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீட்டை இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த 18-ந் தேதி இடித்து அகற்றினர்.
தொடர்ந்து அன்று மாலையில் திடீரென அம்மணி அம்மாள் மடமும் இடிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மடம் இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மடத்தை சுற்றி தகர சீட்டினால் வேலி போன்று அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் இடிக்கப்பட்ட அம்மணி அம்மாள் மடத்தை பெண் சித்தர் அம்மணி அம்மாள் வம்சா வழியினர் செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் (அம்மணி அம்மனின் சொந்த ஊர்) பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவியான சுமார் 75 வயதுடைய அம்மணி அம்மாள் தலைமையில் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டனர். அம்மணி அம்மாள் நினைவாக இவருக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டதாம். இவர்கள் பெண் சித்தர் அம்மணி அம்மாளின் நாலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள்.
75 வயது அம்மணி அம்மாள் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறும் போது,
பெண் சித்தர் அம்மணி அம்மாள் வழியில் நான்காவது தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள் அவர் எங்களுக்கு பாட்டி முறை வேண்டும். அம்மணி அம்மன் மடத்தில் இருந்த வீடு அகற்றப்பட்டது சரியானது. ஆனால் மடத்தை இடித்தது எந்த நியாயமும் கிடையாது, இடித்தவர்கள் மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும் .
மேலும் இடிக்காமல் மீதி இருக்கும் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்து நினைவுச்சின்னமாக மாற்ற வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். இந்த மடத்தில் அம்மணி அம்மாள் அன்ன சத்திரமாக மாற்றி மக்களுக்காக சமூக சேவையாற்றி வந்தார். கார்த்திகை தீப திருவிழாவின் 10 நாள் உற்சவத்துக்கு வரும் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அன்னதானமும் இங்கு வழங்கப்பட்டதாக எங்களது முன்னோர்கள் கூறி நாங்கள் அறிந்துள்ளோம்.
எனவே, இந்த புனிதமான இடத்தில் அம்மணி அம்மன் நினைவாக அன்ன சத்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அம்மணி அம்மாளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், தியான கூடம் அமைக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2