திருவண்ணாமலை: குரூப் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை 29 ஆயிரத்து 447 பேர் எழுதினர். 4,141 பேர் தேர்வு எழுத வரவில்லை.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, கீழ்பென்னாத்தூர், போளூர் ஆகிய பகுதிகளில் 65 பள்ளிகள், 49 கல்லூரிகள் ஆக மொத்தம் 114 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 588 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வர்கள் தேர்வு மையங்களில் காலை 9 மணிக்குள் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பின்னர் வந்தவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு மையங்களில் தேர்வின் போது முறைகேடு நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க ஏதுவாக துணை ஆட்சியர் நிலையில் 14 பறக்கும் படைகளும், 228 ஆய்வு அலுவலர்களும், 27 மொபைல் யூனிட் அலுவலர்கள் மற்றும் 114 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் தேர்வு பணிகள் அனைத்தும் 119 வீடியோகிராபர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வை 29 ஆயிரத்து 447 பேர் எழுதினர். 4 ஆயிரத்து 141 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இம்மாவட்டத்தில் 36 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு உதவியாளர் மூலம் கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்பட்டு தேர்வு எழுதினர்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.