/* */

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த ஆசிரியர் தற்கொலை

செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்த விரக்தியில் ஜாமினில் வந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த  ஆசிரியர்   தற்கொலை
X

பைல் படம்

கலசபாக்கம் அருகே சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் ( 55). இவர் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் காளியப்பன், மாணவிகளிடம் பாலியல் தூண்டுதலில் ஈடுபட்டதாக போளூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் காளியப்பன் வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் வந்ததிலிருந்து சரிவர சாப்பிடாமல், தூங்காமலும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார். காளியப்பன் மிக மனவேதனையுடன் குடும்பத்தாரிடம் நான் செய்யாத தவறுக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நான் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் நிலையில் இப்படி நடந்துள்ளது எனக்கு மிகவும் மன வேதனையாகவும், வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறிவந்து உள்ளார்.

இந்த நிலையில் காளியப்பன் தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக அவரது மனைவி விஜயா கடலாடி போலீசில் புகார் அளித்தார். அதில் செய்யாத குற்றத்திற்காக எனது கணவர் காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவர் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த காளியப்பனுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

Updated On: 19 Aug 2022 10:53 AM GMT

Related News