திருவள்ளூர் எஸ். பி. அலுவலகத்தில் விஷம் அருந்தி பெண் தற்கொலை முயற்சி
திருவள்ளூர் மாவட்ட எஸ். பி. அலுவலகத்தில் விஷம் அருந்தி பெண் தற்கொலை முயற்சிசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்ட எஸ். பி. அலுவலகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் குபல்வார் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மதிலாரமா (வயது 37 )என்பவர் ஒரு மனுஅளித்தார்.
அதில் தனது கணவரின் நண்பரான அத்தங்கி காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு ஊத்துக்கோட்டை பகுதியில் வைத்து கடனாக 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இது நாள் வரை அந்தப் பணத்தை பிரபாகரன் திரும்ப அளிக்காததால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்த நிலையில். எட்டு மாதங்கள் ஆகியும் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இருந்தார்.
எட்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட அந்த பெண் திருவள்ளூர் பகுதிகளில் கோவில், பள்ளிக்கூடம், நடைபாதையில் தங்கி தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடந்து வந்து விசாரித்து வந்த நிலையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் தன்னை 8 மாதங்களாக அலைக்கழிப்பதாகவும் பிரபாகரன் தரப்பு மற்றும் அவரது வழக்கறிஞர் சொல்வதை மட்டுமே கேட்டு தனக்கு வர வேண்டிய பணத்தை பெற்று தராமல் தன்னை அலட்சியப்படுத்துவதாகவும் கூறி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அப்பெண்ணை காவல்துறையினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.