அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் மிஸ்சிங்
திருவள்ளூரில் நடைபெற்ற கொரோனா நிவாரண நிதி வழங்கும் அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடாமல் முடிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனையடுத்து திமுக தலைமையிலான அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ. 4000 வழங்கப்படும் என்றும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான விழா நடைபெற்றது. காலை 11 மணிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 10 மணிக்கு பயனாளிகளை வரவழைத்துள்ளனர்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றதால் சுமார் 5 மணி நேரம் கழித்து விழா மேடைக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு விழாவின் போது பின்பற்ற வேண்டிய தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடாமல் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
இதனால் 5 மணி நேரத்திற்கும் கால தாமதமானதால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் பல நோய்களுக்கு ஆளானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நிவாரண தொகையை வழங்கியதும், அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடிந்து கீழே இறங்கினார்.
அப்போதும் கடைசியில் தேசிய கீதம் பாடவில்லை. திமுக தலைமையிலான அரசு பதவியேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் அரசு நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையிலான விழாவில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாதது அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது