ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
HIGHLIGHTS
பெரியபாளையம் அருகே ஆரணி வள்ளுவர்மேடு பகுதியில் குடிநீர் வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை தி.மு.க. கவுன்சிலர் தலைமையில் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சி நூற்றாண்டை கண்ட பேரூராட்சியாக இம்மாவட்டத்தில் உள்ளது.இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிமன்றத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாரும் பதவி வகித்து வருகின்றனர். பேரூராட்சி மன்ற செயல் அலுவலராக கலாதரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆரணி பேரூராட்சியில் உள்ள வள்ளுவர்மேடு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை,தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை,ஒர்க் ஆர்டரை இப்பகுதியைச் சேர்ந்த 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான தனக்கு காண்பிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொன்னரசி நிலவழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்,பேரூராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் இப்பகுதி பொதுமக்களுடன் இப்பேரூராட்சி உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும்,பேரூராட்சி மன்ற தலைவர்,செயல் அலுவலர், நியமனக்குழு உறுப்பினரும், 10-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கண்ணதாசன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்,தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதியுடன் கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.மேலும், வள்ளுவர் மேடு பகுதிக்கு பத்து நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.இதன் பின்னர்,அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இந்த பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
பொதுவாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சர்வ வல்லமை படைத்தவர்கள் ஆவார்கள். தேர்தலில் தனக்கு வாக்களித்து மாமன்ற உறுப்பினர் என்ற தகுதியை வழங்கிய மக்களுக்கான போராடக்கூடிய முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அந்த போராட்டத்திற்கும் சில விதிமுறைகள் உள்ளன. மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் மாமன்ற கூட்டத்தில் தான் மக்களுக்கான வாதாடி வெற்றி பெறவேண்டுமே தவிர இது போல் பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவோ அல்லது உண்ணாவிரதம் போன்ற போராட்டம் நடத்தவோ உரிமை கிடையாது என்பது பொதுவான மரபாகும். ஆனால் ஆரணி பேரூராட்சியில் இந்த விதிமுறைகளை மீறி மாமன்ற உறுப்பினரே முற்றுகை போராட்டம் நடத்தி இருப்பது பெரிய பிரச்சினையாக உருவாகி உள்ளது.