கழிவுநீர் வெளியேறுவதில் பிரச்சனை: பெண் கொலை
கழிவுநீர் வெளியேறுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கல்லட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சோபனா குமாரி (41). புஷ்பராஜ் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அதே இடத்தில் கீழ்பகுதியில் பாலசுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன் (30) வீட்டு முன்பு சென்றது.
தனது வீட்டு முன்பு கழிவுநீர் செல்வதால் மணிகண்டன் அடிக்கடி சோபனா குமாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தனது வீட்டு முன்பு கழிவுநீர் செல்வதை பார்த்த மணிகண்டன் சோபனா குமாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகாத வார்த்தைகளை பேசவே தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சோபனா குமாரியை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர் தலையில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனே அக்கம்பக்கத்தினர் சோபனாகுமாரியை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே சோபனா குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் புதுமந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் மணிகண்டன் பெண்ணை கொலை செய்தது தெரிய வந்தது. அவர் மீது கொலை வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.