அரசு விடுதிகளில் உணவின் தரத்தை அதிகரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு
அரசு விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
HIGHLIGHTS
இந்திய மாணவர் சங்க, நாமக்கல் மாவட்ட குழு சார்பில், மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து, ஹாஸ்டல்களில் தங்கிப் படித்து வருகின்றனர். அரசு ஹாஸ்டல்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், சுவையாகவும், சுகாதாரமாகவும் வழங்கப்படுவதில்லை.
அரசு ஹாஸ்டல்களில் தரமற்ற,கெட்டுப்போன உணவு சாப்பிட்ட காரணத்தால், சமீபத்தில் கொல்லிமலை ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியிலும், நடுப்பட்டி நடுநிலை பள்ளியிலும் வயிற்று வலி மற்றும் தலைவலி, மயக்கம் என உடல்நிலை சரியில்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பதும், சிகிச்சை பெறுவதும் தொடர்கதையாக உள்ளது, இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், உடல்நிலையும் கெட்டுப்போகிறது.
எனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தரமான உணவினை வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும். அதே போல் ஹாஸ்டல் மாணவர்களுக்கு வழங்க கூடிய உணவு படியை நாள் ஒன்றுக்கு 60 ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பொன்மணி செல்வன், ஞானிதா, ராஜ சூர்யா மற்றும் விஷ்வா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.