சிப்காட் அமைப்பதை கைவிடக்கோரி கிராம சபையில் தீர்மானம்; கொமதேக கோரிக்கை
namakkal news, namakkal news today- மோகனூர் ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி, கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் கொமதேக சார்பில் பஞ்சாயத்து தலைவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, புதுப்பட்டி, ஈச்சவரி, லத்துவாடி மற்றும் பரளி பஞ்சாயத்து பகுதிகளில் தமிழக அரசின் மூலம் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் தொழிற்பேட்டை அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 22ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ள பஞ்சாயத்துக்களில், தொழிற்பேட்டை அமைப்பதை தமிழக அரசு கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றக்கோரி, நாமக்கல் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் சிப்காட் எதிர்ப்புக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம், மோகனூர் கிழக்கு ஒன்றிய செலாளர் சிவகுமார் மற்றும் கொமதேக நிர்வாகிகள், சிப்காட் எதிர்ப்புக் குழுவினர் அரூர், லத்துவாடி, பரளி, புதுப்பட்டி, வளையப்பட்டி ஆகிய பஞ்சாயத்து தலைவர்களை நேரில் சந்தித்து இது சம்பந்தமான கோரிக்கை மனுக்களை வழங்கினா்.