சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்கள்: பசுமை ஆர்வலர்கள் வேதனை!
பள்ளிபாளையத்தில், நான்கு வழிச்சாலைக்காக மரங்கள் அகற்றப்பட்டு வருவது, பசுமை ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தொடங்கி,திருச்செங்கோடு வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, திருச்செங்கோடு தோக்கவாடி பகுதியில் இருந்து, பள்ளிபாளையம் சாலை வரை, தற்போது இருபுறமும் உள்ள மரங்கள், கடை, நிறுவனங்கள் முழுமையாக அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி, அண்ணா நகர் பகுதி அருகே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி அடையாளமாகவும், மக்களுக்கு பசுமைப்பரப்பை தந்து வந்ததுமான அரசமரம், நெடுஞ்சாலை ஊழியர்கள் கொண்டு அகற்றப்பட்டது. இது, அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சாலை வசதிக்காக மிக நீண்ட காலம் வளர்ந்து வந்த பல்வேறு வகையான மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு வருகிறது. இது பசுமை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வளர்ச்சிப்பணிகளுக்கு மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்க முடியாததுதான்; எனினும் வெட்டப்படும் மரங்களை விட பல மடங்கு அதிகமாக மரக்கன்றுகளை நட்டு, பசுமைப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.